திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - வினாவுரை
பண் - நட்டபாடை
அங்கமும் வேதமும் ஓதுநாவர்
    அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
1
நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
    நேர்புரி நூன்மறை யாளரேத்த
மைதவழ் மாட மலிந்தவீதி
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்
    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூரெரி யேந்தியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
2
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்
    தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
3
நாமரு கேள்வியர் வேள்வியோவா
    நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயில்மேய
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
4
பாடல் முழவும் விழவும்ஓவாப்
    பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெடுங்கொடி விண்தடவும்
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேயிட மாகஆடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
5
புனையழ லோம்புகை அந்தணாளர்
    பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாட மலிந்தவீதி
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்
    பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து
மாண்டங்கு நூன்மறை யோர்பரவ
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
வேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
8
அந்தமும் ஆதியும் நான்முகனும்
    அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்க ளோதுநாவர்
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கந்தம் அகிற்புகை யேகமழுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
9
இலைமரு தேயழ காகநாளும்
    இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
நிலையமண் டேரரை நீங்கிநின்று
    நீதரல் லார்தொழும் மாமருகல்
மலைமகள் தோள்புணர் வாயருளாய்
    மாசில்செங் காட்டங் குடியதனுள்
கலைமல்கு தோலுடுத் தொல்லியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
10
நாலுங் குலைக்கமு கோங்குகாழி
    ஞானசம் பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கும்
    மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
    சொல்லவல் லார்வினை யில்லையாமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.61 திருச்செங்காட்டங்குடி
பண் - பழந்தக்கராகம்
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.
1
வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ டோங்கியசீர் விழவோவாச்
சீரேற்ற முடையத்தாய செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே.
2
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே.
3
தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண்
டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே.
4
பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.
5
நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே.
6
மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச்
செய்யினார் தண்கழனிச் செங்காட்டங் குடியதனுள்
கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே.
7
தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த
பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங்
காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே.
8
ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே.
9
செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் விற்றிருந்தான் கணபதீச் சரத்தானே.
10
கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்
நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com